தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற நான்கு வயது சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே நான்கு வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோசினி. மோனிகா தேவி தனது வீட்டின் பின்பிறம் தனது மகளுடன் வெள்ளிக்கிழமை தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிறுமியின் மீது பாய்ந்து தூக்கிச் சென்றது.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் ஓடி வந்து, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினரும் தொடர்ந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, சிறுமியின் உடை மட்டுமே கிடைத்துள்ள நிலையில், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ட்ரோன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.