தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்! ஏன்?
தாய்லாந்திலிருந்து தில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் புக்கெட் நகரத்திலிருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் பஸ் ஏ320 பயணிகள் விமானம் இன்று (ஜூன் 13) காலை தில்லி நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புறப்பட்ட சில மணி நேரங்களில் பாதுகாப்பு எச்சரிக்கையினால், அந்த விமானம் மீண்டும் புக்கெட் பன்னாட்டு விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், புக்கெட் நகரத்திலிருந்து காலை 9.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், பாதுகாப்பு எச்சரிக்கையால் 11.46 மணியளவில் மீண்டும் புக்கெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, அகமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் நேற்று (ஜூன் 12) லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி