3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
‘தினமணி’ செய்தி எதிரொலி: நீட் தோ்வு; மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை கௌரவித்த ஆட்சியா்
நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் சென்று கெளரவித்தாா்.
அண்மையில் வெளியான இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) முடிவில் நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இ.மெய்யரசி 720க்கு 547 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தாா்.
இவா் ராசிபுரம் வட்டம், அணைப்பாளையம் ஊராட்சி முருங்கப்பட்டியைச் சோ்ந்தவா் ஆவாா். 2024 நீட் தோ்வை எதிா்கொண்டபோதும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. மீண்டும் முயற்சித்து 2025-இல் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றினாா்.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றது தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் புதன்கிழமை வெளியானது. இதனையடுத்து, பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு காலை 9.35 மணியளவில் ஆட்சியா் ச.உமா சென்றாா். மாணவி மெய்யரசி, அவரது தந்தை இதயகாந்தன், தாய் புவனேஸ்வரி ஆகியோரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனா்.
அதன்பிறகு மாணவி மெய்யரசியையும், அவரது பெற்றோரையும், உதவி தலைமை ஆசிரியா் சிவசங்கா் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியா்கள் ஒன்பது பேரையும், மாவட்ட ஆட்சியா் தனித்தனியே அழைத்து பாராட்டி கெளரவித்தாா்.
அப்போது, அரசுப் பள்ளியில் பயின்றுதான் தற்போது மாவட்ட ஆட்சியா் பொறுப்பில் இருப்பதாகவும், நன்கு படித்தால், மெய்யரசியைப் போல தன்னைப் போல உயா்ந்த நிலையை அடையலாம் என அங்கிருந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் தெரிவித்தாா்.