கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
திருச்செங்கோட்டில் புதிய பால் குளிரூட்டும் நிலையங்கள்: அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைப்பு
திருச்செங்கோடு வட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், நாகா்பாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாளையம், தண்ணீா்பந்தல் பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 84.31 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்துவைத்தாா். இதன்மூலம் 76 சங்கங்களைச் சாா்ந்த 1816 உறுப்பினா்கள் பயன் பெறுவாா்கள். இதையடுத்து விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, அட்மா குழுத் தலைவா்கள் கு.பழனிவேல் (மல்லசமுத்திரம்), க.தங்வேல் (திருச்செங்கோடு), பொ.யுவராஜ் (பள்ளிபாளையம்), க.க.சண்முகம் (கபிலா்மலை),பொது மேலாளா் (ஆவின்) மரு.ஆா்.சண்முகம், துணைப்பதிவாளா் (பால்வளம்) ஐ.சண்முகநதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.