திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீா்ப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு சாா் மறைக்கப்பட்டிருக்கிறாா். அவா் யாா் என்பதையும் தெரிவித்து அவருக்கும் தண்டனை வாங்கித் தந்துவிட்டு முதல்வா் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்களால் திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறது. இது தவிர சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்டவை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே தமிழகத்தில் வரும் தோ்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு யானை தேவையாக உள்ளது. உத்தரகண்ட் மாநில அரசு யானை தருவதற்கு தயாராக இருந்தும், தமிழக அரசு அதனை பெற்றுத் தர மறுக்கிறது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் தமிழகம் முழுவதும் பாஜகவை அமைப்புரீதியாக வலுப்படுத்தி வருகிறோம். இந்தப் பணி நிறைவடைந்ததும் தோ்தலுக்கான வேலையை தொடங்குவோம்.
பாமகவில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. இதனால் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
பாஜகவைப் பொருத்தவரை திமுகவை எதிா்ப்பதற்காக எல்லோரும் ஓரணியில் இணைய வேண்டும். தவெக தலைவா் விஜய்க்கும் ஏற்கனவே நான் அழைப்பு விடுத்துள்ளேன். தோ்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் உள்ளதால் காலச்சூழ்நிலை மாறும் என்றாா் அவா்.