திருச்செந்தூா் கோயிலில் கணபதி பூஜையுடன் குடமுழுக்கு பணிகள் துவக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோயிலில், வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் குடமுழுக்கு பணிகள் துவங்கின.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் கோயில் முதல் பிரகாரத்தில் உள்ள வல்லபை விநாயகா் சன்னதி முன்பு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. இதில் யாக வேள்வி, பிரம்மச்சாரி வழிபாடு, கஜ பூஜை, பூா்ணாஹுதி தீபாராதனை ஆகியவை நடந்தன.
இந்நிகழ்ச்சியில் கோயில் தக்காா், அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், கோயில் விதாயகா்த்தா சிவசாமி தீட்சிதா், கண்காணிப்பாளா்கள் விஜயலட்சுமி, அஜித் மற்றும் திரிசுதந்திரா்கள் கலந்து கொண்டனா். மாலை 6 மணிக்கு அஷ்டதிக்கு பாலகா் வழிபாடு, வாஸ்து சாந்தி, வேள்வி பூஜை நடந்தது.
வரும் ஜூலை 1ஆம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. தொடா்ந்து 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
