கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!
தில்லி பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்ம மரணம்! 18 நாளாகியும் எப்ஐஆர்கூட இல்லை; தாய் கதறல்!
தில்லியில் பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவி மரணமடைந்து 18 நாள்களாகியும் காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யவில்லை என்று தாயார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தில்லி புறநகர்ப் பகுதியான நொய்டா செக்டார் 31 பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், கடந்த செப். 4 ஆம் தேதி 6 ஆம் வகுப்பு மாணவி தனிஷ்கா சர்மா, மயங்கி விழுந்துள்ளார்.
அந்த மாணவியை தனியார் மருத்துவமனையில் பள்ளி ஆசிரியர்கள் அனுமதித்த நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உணவு அருந்தும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, உடற்கூராய்வு அறிக்கையில் ‘காரணத்தை உறுதி செய்ய முடியாத மரணம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை பெற்றோர் வளர்ப்பு குழந்தை
மாணவி தனிஷ்கா சர்மாவின் தந்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அவரது தாய் திரிப்தா சர்மாவின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார்.
தனிஷ்காவின் மரணம் குறித்து அவரது தாயார் திரிப்தா சர்மா, முகநூல் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
“எனக்கு மலர் போன்ற ஒரு மகள் இருந்தாள். செப். 4 ஆம் தேதி ஆசிரியர் நாள் கொண்டாட்டத்துக்காக ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற எனது மகளை நான்தான் பள்ளியில் இறக்கிவிட்டேன். காலை 11.30 மணியளவில் ஆசிரியர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் மகள் மயங்கி விழுந்துவிட்டார் என்று கூறினர்.
உடனடியாக நான் மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால், மருத்துவர்கள் உங்கள் மகள் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். இந்த செய்தி என் உலகத்தையே உலுக்கியது. பள்ளி என்பது இரண்டாவது வீடாக கருதி, பாதுகாப்பாக இருப்பார்கள் என்றுதான் குழந்தையை அனுப்புகிறோம். ஆனால், பள்ளியிலேயே என் மகள் இறந்துவிட்டாள்.
என் மகள் திரும்பி வரமாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அவளின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது? ஒரு தாயாக உண்மையை நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு நீதி வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மாணவி மரணத்தில் மர்மங்கள்
மதிய உணவு சாப்பிடும்போது தனிஷ்கா உயிரிழந்ததாக பெற்றோர்களிடம் முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், படிக்கட்டுகளில் இருந்து இறங்கும்போது சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் சிசிடிவி காட்சிகளை மாணவியின் தாயாரிடம் பகிர மறுத்தது சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது.
மேலும், பள்ளியின் சிசிடிவி கேமிராக்களில் கோளாறு இருந்ததாகவும், மாணவி விழுந்ததாக கூறப்படும் பகுதி கேமிரா கண்காணிப்பில் இல்லை என்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளியின் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
அதேபோல், மாணவி மயங்கியவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பள்ளியின் முதலுதவி அறைக்கு அழைத்துச் சென்றதால், விலைமதிப்பற்ற தங்கள் மகளின் உயிரை இழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருவதால், இதுவரை காவல்துறை தரப்பில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உடற்கூராய்வின்போது மாணவியின் உடலில் வெளிப்புறக் காயங்கள் ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தடயவியல் பகுப்பாய்வுக்காக மாணவியின் உடல் உறுப்புகளின் பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.