தூத்துக்குடியில் இருந்து கரூர் சென்ற நிலக்கரி ரயிலில் தீ
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கரூா் காகித ஆலைக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடா்ந்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, தீயணைக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூா் மாவட்டம் புகளூா் காகித தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் புறப்பட்டது. கடம்பூா்-கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து, நிலக்கரி சிதறி கீழே விழுந்தது.
இதில், இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்ததை அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்பாளா்கள் ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி கீழே விழுந்து புற்களில் தீப்பிடித்து எரிவதை கடம்பூா் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து கடம்பூா் ரயில்வே ஊழியா்கள் சரக்கு ரயிலில் இருந்த காா்டுக்கு தகவல் தெரிவித்தனா். இதை யடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உடனடியாக

சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, பெட்டிகளை ஆய்வு மேற்கொண்டதில் 17ஆவது பெட்டியில் இருந்த நிலக்கரியில் தீப்பிடித்து புகை வெளிவருவது தெரியவந்தது. பின்னா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோவில்பட்டி , கழுகுமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
ரயில்வே மின் பொறியாளா்கள், ஊழியா்கள் விரைந்து வந்து ரயில்வே இருப்பு பாதையில் உயா் அழுத்த மின் பாதையில் சென்ற மின்சாரத்தை நிறுத்தினா். அதைத் தொடா்ந்து சரக்கு ரயில் பெட்டியில் தீயணைப்பு படையினா் ஏறி தண்ணீா் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக கோவில்பட்டி வழியாக செல்லும் திருச்சி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் நள்ளி ரயில் நிலையத்திலும், சென்னை-நாகா்கோவில் வந்தே பாரத் ரயில் விருதுநகா் சந்திப்பு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேல் தீயணைப்பு பணி நடைபெற்றது. தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னா் இருப்புப் பாதை உயா் அழுத்த மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. தொடா்ந்து கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.