அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையே எவ்வளவு தங்க நகைகள் மீட்கப்பட்டன?
காந்திநகர்: அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையில் மீட்கப்பட்ட 100 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள், சேதமடையாத ஒரு பகவத் கீதை புத்தகம் உள்ளிட்ட பொருள்களை போலீசாரிடம் மீட்புப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 1:39 மணிக்கு புறப்பட்ட ஏா் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம், சில நிமிஷங்களிலேயே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேகனிநகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது 650 அடி உயரத்தில் இருந்து விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும், விமானம் விழுந்த இடத்தில் மருத்துவ மாணவா்கள் உள்பட 29 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா்.
விபத்தில் உயிரிழந்தோரில் இதுவரை 162 பேரின் உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இவா்களில் 120 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
உடல்களை அடையாளம் காணும் பணிகள் புதன்கிழமை காலையுடன் (ஜூன் 18) நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), விமானப் போக்குவரத்துத் துறையின் விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏபிஐ) உள்பட பல்வேறு முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
எஞ்ஜின்கள் செயலிழப்பால் விபத்து நேரிட்டதா அல்லது பறவைகள் கூட்டமாக மோதியதால் அசம்பாவிதம் நடந்ததா என பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே, விபத்து நடந்த இடத்தை முதலில் அடைந்தவர்கள் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள். பின்னர் அருகில் இருந்த 56 வயதான ராஜு படேல் என்ற கட்டுமான தொழிலதிபர் 5 நிமிடங்களில் தனது குழுவினருடன் சம்பவ இடத்தை அடைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விபத்து நடந்த பகுதியில் அனல் கடுமையாக இருந்ததால் முதல் 15 முதல் 20 நிமிடங்கள் எங்களால் அருகில் கூட செல்ல முடியவில்லை என்றும், சுற்றிலும் தீ பலமாக எரிந்துகொண்டிருந்தது. தீயணைப்புப் படையின் முதல் குழுவினர், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் நாங்கள் மீட்பு நடவடிக்கையில் இறங்கினோன். தொடக்கத்தில் ஸ்ட்ரெச்சர்கள் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களை மீட்பதற்கு உள்ளூர் மக்களின் சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை பயன்படுத்தினோம் என கூறினார்.
படேல் குழுவினரை இரவு 9 மணி வரை சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேர்கொள்ள அதிகாரிகள் அனுமதித்தனர். இதற்கிடையில் அவசர சேவைகள் பிரிவினர் அந்த பகுதியை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்ட பின்னர் படேல் குழுவினர் அடுத்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதாவது பயணிகளின் உடைமைகளும், விமான பாகங்களும் சிதறிக் கிடந்த அந்த கருகிய நிலத்தில் விலை உயர்ந்த பொருள்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து இடிபாடுகளுக்கு இடையே பயணிகளின் உடமைகளும் விமான பாகங்களும் சிதறிக்கிடந்த விலை உயர்ந்த பொருள்களை தேடும் பணியிலும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இதில் 800 கிராமுக்கு மேற்பட்ட(100 பவுன்) தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் பணம், பாஸ்போர்ட்கள், ஒரு பகவத்கீதை புத்தகம் ஆகிவற்றை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து பொருள்களையும் பதிவு போலீசாரிடம் ஒப்பட்டைத்துள்ளனர் மீட்புக் குழுவினர்.
இதையடுத்து இடிபாடுகளுக்கு இடையே மீட்கப்பட்ட அனைத்து உடைமைகளும் ஆவணப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.