Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த கேரள விசைப்படகுகளுக்கு ரூ.26 லட்சம் அபராதம்
மீன்பிடி தடைக்காலத்தின்போது, தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 கேரள விசைப்படகுகளுக்கு ரூ. 26 லட்சம் அபராதம், 6 மாத காலம் மீன் பிடிக்கத் தடை விதித்து, தூத்துக்குடி மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983இன் படி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.15முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்கும்.
இந்தத் தடைக்காலத்தில் கேரள விசைப்படகுகள், தூத்துக்குடி கடலில் மீன்பிடித்தலில் ஈடுபடுவதை தடுக்க, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் கடலில் தொடா் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 2 கேரள விசைப் படகுகள் பிடிபட்டன. இந்த படகுகளில் இருந்த மீன்கள் ஏலம் விடப்பட்டு, அந்தத் தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலத்தில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 2 விசைப்படகுகளுக்கும் தூத்துக்குடி மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் தலா ரூ.13 லட்சம் அபராதம் விதித்தனா்.
மேலும் 2 படகுகளும் தலா 6 மாதம் மீன்பிடித்தலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.