Oarfish: வலையில் சிக்கிய துடுப்பு மீன்; பேரழிவுக்கான அறிகுறியா? - ஆராய்ச்சியாளர் பதில் |Explained
துடுப்பு மீன் - இந்த மீன் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கரை ஒதுங்குகின்றன.,. வலையில் சிக்குகின்றன. 'இதில் என்ன பிரமாதம்?' என்பது தானே உங்களது கேள்வி. இந்த மீன் கரை ஒதுங்கினால் உலகில் ஏதேனும் அசம்பாவிதம் அல்லது பேரழிவு ஏற்படும் என்பது ஜப்பானிய நம்பிக்கை.
ஜப்பானைத் தாண்டி, இந்த நம்பிக்கை உலகம் எங்கிலும் உள்ளது. காரணம், சிலி, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பேராபத்து ஏற்படுவதற்கு முன்பு, இந்த மீன் கரை ஒதுங்கியிருக்கிறது. அதனால், மக்களிடையே இந்த மீன் குறித்து பயம் அதிகம் இருக்கிறது.
சமீபத்தில் இந்த மீன் தமிழ்நாட்டு மீனவர்களின் வலையில் சிக்கி உள்ளது. இது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், மக்களிடையே உள்ள நம்பிக்கை உண்மையா என்று கடல்சார் ஆராய்ச்சியாளர் நாராயணி சுப்ரமணியனிடம் கேட்டோம். அவர் கூறிய பதில்...
"ஆழ்கடல் மீன் வகையைச் சேர்ந்தது துடுப்பு மீன். இந்த மீன் கரை ஒதுங்கினால் பேரழிவு வரும் என்பது நீண்டக்கால 'நம்பிக்கை'. ஆனால், துடுப்பு மீன் கரை ஒதுங்கிய அனைத்து சமயங்களிலும் உலகில் பேரழிவு ஏற்பட்டுவிட்டதா என்று கேட்டால், 'இல்லவே இல்லை'. மேலும், இந்தக் கூற்றுக்கான எந்தவித அறிவியல் ரீதியான ஆதாரமும் இப்போது வரை இல்லை. அதனால், துடுப்பு மீன் கரை ஒதுங்குவதால் மட்டும் பேரழிவு ஏற்படும் என்பது வெறும் மூட நம்பிக்கையே.
துடுப்பு மீனுக்கும், பேரழிவுக்கு சம்பந்தம் உள்ளது என்பது ஜப்பானிய நம்பிக்கை. அங்கேயேக் கூட, இரண்டிற்கு எந்தவித சம்பந்தமில்லை என்று கூறிவிட்டார்கள். அதனால், தேவையில்லாத அச்சம் நமக்கு வேண்டாம்.
துடுப்பு மீன் ஏன் கரை ஒதுங்குகிறது?
இப்போது ஒன்றை முக்கியமாக கவனிக்க வேண்டும். முன்னெப்போதும் இல்லாத வகையில், இப்போது அடிக்கடி துடுப்பு மீன்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்குகின்றது.
ஆழ்கடல் மீன் அந்தப் பகுதியைத் தாண்டி இப்போது ஏன் அதிகம் கரை ஒதுங்குகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். ஆழ்கடலில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், அங்கே தட்ப வெப்பம் மாறியிருக்கலாம், ரசாயனம் மற்றும் அழுத்தம் அளவு கூடியிருக்கலாம், உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் - இப்படி இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். இதை பற்றி எல்லாம் கேள்வி எழுப்பி, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி செய்ய வேண்டியது அவசியம்.

ஆழ்கடல் தான் சிறந்தது!
துடுப்பு மீன் உள்ளிட்ட அனைத்து ஆழ்கடல் மீன் வகைகளுக்குமே அதன் இடம் தான் சிறந்தது. இதைத் தாண்டி, அந்த மீன்கள் வலையில் சிக்குவதும், கரை ஒதுங்குவதும் நல்லதல்ல.
பொதுவாக, மீனவர்கள் போடும் வலையில் சிக்கிக்கொள்ளும் அளவு தூரத்தில் துடுப்பு மீன்கள் இருக்காது. அதனால், அவர்கள் போடும் வலையில் சிக்கிக்கொள்ளும் தூரத்தில் துடுப்பு மீன்கள் இருப்பது கவனிக்கப்பட வேண்டும். இதற்கு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி தான் வேண்டுமே தவிர, பயப்படத் தேவையில்லை.
ஆழ்கடலில் நில அதிர்வு ஏற்பட்டால்...
ஒருவேளை ஆழ்கடலில் நில அதிர்வு ஏற்பட்டால், அந்த மாற்றத்தினால் இந்த மீன்கள் கரை ஒதுங்கலாம். ஆனால், இது வாய்ப்பு தானே தவிர, உறுதியாகக் கூறமுடியாது.
இறந்தால் கரை ஒதுங்குமா?
பெரும்பாலும் இறந்த துடுப்பு மீன்களே கரை ஒதுங்கியிருக்கிறது. ஆனால், இறந்த மீன்கள் அங்கு இருக்கும் கடல் உயிரினங்களுக்கே தான் பெரும்பாலும் இரையாகி விடும். ஆனால், இதில் மாற்றம் ஏற்றப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று.

பயம் அவசியமா?
வங்காள விரிகுடா மற்றும் அரேபிக் கடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க இந்தியாவிடம் சென்சார் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளது. நில அதிர்வு, பேரழிவிற்கான வாய்ப்பு ஏற்படும் போது, இந்த மானிட்டரிங் சிஸ்டங்கள் மூலம் நமக்கு தானாக தெரிந்துவிடும். அதனால், மக்களிடையே தேவையில்லாத பயம் வேண்டவே வேண்டாம்" என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.