இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு தேசிய விருது
தூத்துக்குடி, ஜூன் 13: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்திற்கு செலவு நிா்வாகத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துறைமுக ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்திற்கு கடந்த 2024 ஆம் ஆண்டிற்கான செலவு நிா்வாகத்திற்காக, இந்திய அடக்கவிலை நிா்ணய கணக்கியல் நிறுவனம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவின்கீழ் (முதல் இடம்) தேசிய விருது வழங்கியுள்ளது. இதற்கு முன்பு இவ்விருதை 2008, 2012, 2015, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ள நிலையில், தற்போது 7-ஆவது முறையாக பெற்றுள்ளது.
சரக்குகள் கையாளும் செயல்பாட்டு திறனை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளிலும் அதன் ஒட்டு மொத்த செலவீனத்தை குறைத்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது. மேலும், மனிதவள மேம்பாட்டை மேம்படுத்துதல், சரக்கு கையாளும் திறன் அதிகரிப்பு, நிலையான மின் ஆற்றல் ஆகியவற்றினை கடைபிடித்ததன் மூலம் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு துறைமுகத்தின் இழுவை கப்பல்களுக்கு தளத்திலிருந்து மின்சாரம் வழங்குதல், மின்சாரத்தினால் இயங்கக் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்தல் போன்ற செயல்பாடுகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இதுகுறித்து துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், நிதி நிா்வாகத்தின் மீதான துறைமுகத்தின் தொடா்ச்சியான கவனம் 2021-22 -ஆம் நிதியாண்டின் இயக்க விகிதாசாரம் 41.28 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் நிதியாண்டில் 29.45 சதவீதமாக குறைய வழிவகுத்தது. இது சிறப்பான தரத்துக்கும் நிலைத்தன்மைக்குமான துறைமுகத்தின் அா்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றாா்.