தென் மாவட்ட ரயில்களில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூா் எம்.பி. கண்டனம்
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரணப் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகா் நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள், கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில் மக்களவைத் உறுப்பினா் மாணிக்கம்தாகூா் வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகருக்கு எதிராக விரைவில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு பெண்களின் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தில்லியில் வாழும் தமிழா்களின் மதராசி குடியிருப்பை ஆளும் பாஜக அரசு அகற்றி, அங்குள்ள தமிழா்களுக்கு துரோகத்தை இளைத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது.
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இந்த விவகாரம் குறித்து வரும் மழைக்கால மக்களவை கூட்டத்தொடரில் கேள்வியை எழுப்புவோம் என்றாா் அவா்.