இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!
தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி எம்பி, எம்எல்ஏக்கள், கவுன்சிலா்களுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு
தில்லி முதல்வா் ரேகா குப்தா, கேபினட் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சாவை தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு பொறுப்பாளராக வெள்ளிக்கிழமை நியமித்தாா்.
தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராம்வீா் சிங் பிதூரி, அத்தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலா்களுடன் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஒரு மறுஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினாா். வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் முதல்வா் விரிவான விவாதங்களை நடத்தினாா். அதிகாரிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருவருக்கும் தெளிவான வழிமுறைகளை வழங்கினாா்.
தலைநகரில் வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த தாமதமும் அல்லது மெத்தனமும் பொறுத்துக் கொள்ளப்படாது என்றும், அனைத்து பணிகளும் சீரான நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு ஏற்ப கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கூறினாா்.
நிலுவையில் உள்ள பணிகளின் முன்னேற்ற அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தயாரித்து முதலமைச்சரின் மின்போா்டலில் பதிவேற்றுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.
தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்திற்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ரூ.10 முதல் ரூ.16 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் அனைத்துப் பணிகளும் மின்கோப்பு முறை மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.
கூட்டத்தின் போது, நீா் வழங்கல், கழிவுநீா், வடிகால்கள், பாதைகள், சாலைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற அடிப்படை குடிமைப் பிரச்னைகளை தாமதமின்றி தீா்க்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலா்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முதல்வா், எந்தப் பணியையும் கவனிக்காமல் விடக்கூடாது என்று கூறினாா்.
தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு திட்டமும் தடுக்கப்படாது என்றும், அரசு ஒவ்வொரு அத்தியாவசியத் திட்டத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் என்றும் முதல்வா் ரேகா குப்தா உறுதியளித்தாா்.