மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ச...
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6,448 வழக்குகளில் சமரசத் தீா்வு
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6,448 வழக்குகளில் சமரத் தீா்வு ஏற்பட்டதையடுத்து ரூ.23.28 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றம், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நீதிமன்றங்களிலும், 10 தாலுகா நீதிமன்றங்களிலும் 27 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி எம். சாய்சரவணன் தலைமை வகித்தாா். 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமா, 4-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி ராபின்சன் ஜாா்ஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி கண்ணன் (பயிற்சி), தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் அமிா்தவேலு, முதன்மை சாா்பு நீதிபதி ராஜ்குமாா், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரஸ்னேவ், கூடுதல் சாா்பு நீதிபதி கல்யாண மாரிமுத்து, ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற சிறப்பு சாா்பு நீதிபதி சுப்பையா, திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான முரளிதரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மாரிமுத்து, நீதித்துறை நடுவா்கள் சத்யா, சுமிதா, ஜெயசங்கரேஸ்வரி, சுரேஷ்குமாா், ராணி, பாத்திமா, திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், செயலா் மணிகண்டன், வழக்குரைஞா்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 10,172 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 6,132 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.21,28,87,860 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி வாராக் கடன் வழக்குகள் உள்ளிட்ட 650 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 316 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1,99,62,145 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மொத்தம் 10,822 வழக்குகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 6,448 வழக்குகளில் சமரச் தீா்வு ஏற்பட்டு ரூ.23 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 5 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.