தேனிலவில் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற சோனம்; 3 மொபைல்கள் எங்கே? விசாரணையில் அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனம் என்ற பெண் கடந்த மாதம் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். சென்ற இடத்தில் கூலிப்படையின் துணையோடு கணவனை கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப்போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
கொலை நடந்து சில நாள்கள் கழித்து அதாவது இம்மாதம் 7-ம் தேதிதான் கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்சியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சோனம், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையினர் 3 பேர் என கொலையில் தொடர்புள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது மேகாலயா போலீஸ் காவலில் இருக்கின்றனர். அவர்களை போலீஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதில் சோனம் முன்னிலையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேரும் ராஜா ரகுவன்சியை அடித்ததாக தெரிவித்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் சோனமும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ராஜா ரகுவன்சியை கொலை செய்த பிறகு சோனம் தனது கணவனின் போனை உடைத்து அப்புறப்படுத்தி இருக்கிறார்.
அதேசமயம் சோனம் சொந்தமாக 3 மொபைல் போன் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த போன்களை இப்போது எங்கு மறைத்து வைத்திருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.
அவற்றை மேகாலயா போலீஸார் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தேடி வருகின்றனர். சோனம் ராஜா ரகுவன்சியை கொலை செய்த பிறகு நேராக இந்தூர் வந்துள்ளார். இந்தூரில் தனது காதலன் ராஜ் குஷ்வாஹாவை சந்தித்து பேசி இருக்கிறார். அங்கு இருக்கும் போது ஒரு போனை ஆன் செய்து வாட்ஸ் ஆப் பார்ப்பதற்காக இண்டர்நெட்டை ஆன் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சோனம் சஞ்சய் வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருந்த மொபைல் போனில் பல முறை போன் பேசியிருக்கிறார்.

மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து ஏப்ரல் 8-ம் தேதி வரை சோனம் சஞ்சய் வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்ட போனுக்கு 100 முறை கால் செய்துள்ளார். அதோடு கொலைக்கு முன்பு 3 வாரத்தில் அதே நம்பருக்கு 234 முறை போன் செய்துள்ளார்.
சஞ்சய் வர்மா என்ற பெயரில் இருக்கும் போன் நம்பர் போலி ஆவணங்கள் கொடுத்து எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். சோனம் உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூரில் கைது செய்யப்பட்ட அன்றுதான் சஞ்சய் வர்மா என்ற பெயரில் செயல்பாட்டில் இருந்த போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஒரு தனிப்படை போலீஸார் இந்தூர் வந்து விசாரித்துக்கொண்டிருக்கின்றனர்.
சோனம் தனது கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.