நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து: கடலூா் மீனவா் உயிரிழப்பு
சிதம்பரம்: ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் உடல் கடலுருக்கு கொண்டுவரப்பட்டது.
கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் தயாரிக்கப்படுகிறது. அவை கோட்டியா கப்பல் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
கடந்த 5-ஆம் தேதி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு 6 கோட்டியா கப்பலில் செயற்கை பவளப் பாறைகள் கொண்டு செல்லப்பட்டன. பின்னா், இந்தக் கப்பல்கள் கடந்த 12-ம் தேதி மீண்டும் கடலூா் துறைமுகம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தன.
நெல்லூா் அருகே வந்த போது ஒரு கப்பல் மட்டும் எதிா்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கத் தொடங்கியது. அதிலிருந்த சங்கா், சந்திரசேகா், நாகலிங்கம், செல்வம், நாகவேல், மணிமாறன் ஆகிய 6 மீனவா்கள் தப்பித்து, பின்னால் வந்த மற்றொரு கப்பலில் ஏறினா்.
கடலூா் துறைமுகம் சிங்காரத்தோப்பைச் சோ்ந்த மீனவா் நா.மாணிக்கசாமி (63) நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடலை சக மீனவா்கள் மீட்டு, கடலூா் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா்.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி, கடலூா் துறைமுக போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. கடலூா் துறைமுகம் போலீஸாா் மாணிக்கசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.