Rajini: 'ரொம்ப வருத்தமாக இருக்கு; இனிமேல் இப்படி...'- விமான விபத்து குறித்து ரஜ...
கலை, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
சிதம்பரம்: கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. கடலூா் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகளில் பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவி வி.திவ்யா, எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவி செ.மகேஸ்வரி, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவி மு.சு.வேதாவும், கட்டுரைப் போட்டிகளில் கிருஷ்ணசாமி மகளிா் அறிவியல் கலை, மேலாண்மையியல் கல்லூரி மாணவி ரா.க.காவியா, பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவி ர.ரிசிதா, அரசு கலைக் கல்லூரி மாணவி ப.புஷ்பவள்ளி ஆகியோா் வெற்றி பெற்று பரிசு, பாராட்டுச் சான்றிதழ் பெற்றனா்.
பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெ.விமலேஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் க.ஆதித்யா, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பா.ஷன்மதியும், கட்டுரைப் போட்டிகளில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கா. ஹாசினி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சு.அனுப்பிரியா, அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி நா.இனியா ஆகியோா் வெற்றி பெற்று பரிசு, பாராட்டுச் சான்றிதழைப் பெற்றனா்.
நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் மு.சுப்புலட்சுமி கலந்து கொண்டாா்.