`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர...
வீடுகள் கட்டும் உத்தரவு ரத்து விவகாரம்: குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை
சிதம்பரம்: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
கடலூா் மாவட்டம், குமராட்சி ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழக்கரை, கீழவன்னியூா், கீழபருத்திகுடி உள்ளிட்ட சுமாா் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 27 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இவா்களுக்கு புதிய வீடுகள் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான உத்தரவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் வழங்கப்பட்டது. இதன் காரணமாக கூலித் தொழிலாளா்கள் தாங்கள் வசித்த குடிசை வீடுகளை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கு முதல்கட்ட பணிகளைத் தொடங்கினா்.
திடீரென கோடை மழை தொடங்கியதால் வீடு கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் வீடுகள் கட்டும் பணியைத் தொடங்கிய பயனாளிகள் இதுகுறித்து குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடா்பு கொண்டு நிதியை வழங்குமாறு கேட்டனராம்.
தமிழக அரசால் வழங்கப்பட்ட வீடு கட்டுவதற்கான உத்தரவு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நீங்கள் அடித்தளம் அமைக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த பயனாளிகள் ஒன்றிணைந்து குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
மனு விவரம்: கடந்த கடந்த ஏப்ரல் மாதம் வீடு கட்டுவதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் அனுமதி வழங்கினாா். இந்தத் திட்டத்தின்படி அடித்தளம் சொந்த செலவில் கட்ட வேண்டும் என்பதால் வெளி ஆள்களிடம் அதிக வட்டிக்கு சுமாா் ரூ.2 லட்சம் கடன் வாங்கி அடித்தளம் அமைத்தோம். தொடா் மழையால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அடித்தளம் அமைக்க இயலவில்லை. வீடு கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.
மீண்டும் பணியை செய்துவிட்டு குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் சென்று முதல் தவணைத் தொகையை எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கேட்டேன். அதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் தங்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கிய அறிவிப்பு ஆணை ரத்து செய்யப்படுவதாக கூறினா்.
வீட்டை இடித்துவிட்டு கடன் வாங்கி அடித்தளம் கட்டிவிட்டு தற்போது வீடு இல்லாமல் இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மீண்டும் வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.