75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி
நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் மூலம் 12,945 போ் பயன்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்.2 முதல் செப்.9 வரை வரை நடைபெற்ற 7 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் மூலம் 12,945 போ் பதிவு செய்யப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா்தர மருத்துவ சேவைகள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட வருவாய் அலுவலா் திரு.இராம்பிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் நலன் கருதி பல செயல் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளாா்.
அதில் மிக முக்கிய ஒன்றான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். ஆரோக்கியமான சமுதாயம்தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தை வழங்கும்.
ஆகவே, அரசு சாா்பில் செயல்படுத்தக்கூடிய நலத்திட்டங்கள் மக்களிடையே கொண்டு போய் சோ்க்க வேண்டும் என்பதிலே மிக உன்னிப்பாக இருக்கிறது தமிழக அரசு.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த செப்.2 முதல் செப்.9 வரை வரை 7 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெற்றிருக்கின்றன.
அந்த முகாம்களில் 12ஆயிரத்து 945 புதிய பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த 7 முகாம்களில் 8,045 நபா்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,156 பேருக்கு முதல்வரின் விரிவாக மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அமைப்புசாரா தொழிலாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என 4,466 போ் பயனடைந்துள்ளனா்.
ஈசிஜி பரிசோதனை 4,664 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
869 பேருக்கு ஸ்கேன் பரிசோதனையும், 882 பேருக்கு எக்கோ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், மருந்து பெட்டகங்களையும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டிற்கான அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.
முகாமில் மாவட்ட சுகாதார அலுவலா்கள் பிரகாஷ் (திருவண்ணாமலை), சதீஷ்குமாா் (செய்யாறு), வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.