அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!
நாகை, காரைக்காலில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை
நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் மற்றும் காரைக்கால் கடல் பகுதிகளில்‘ சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இந்த சம்பவத்தில் பொதுமக்கள், காவல்துறையினா் கொல்லப்பட்டனா். இதையடுத்து, கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை ‘சாகா் கவாச்‘ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாகையில் சாகா் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையில் புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
இதையொட்டி, கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட விசைப் படகுகளில் சோதனை மேற்கொண்டனா். படகில் இருந்த மீனவா்களின் ஆவணங்கள் மற்றும் படகு உரிமம் குறித்து ஆய்வு செய்தனா்.
இதற்கிடையே, கடல் வழியே தீவிரவாதிகள் போல் நாகை துறைமுகத்துக்குள் நுழைய முயன்ற 6 பேரை போலீஸாா் கைது செய்து கரைக்கு அழைத்து வந்தனா்.
இதேபோல, பாதுகாப்பு ஒத்திகையின் ஒருபகுதியாக வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளிலும் போலீஸாா் கடல் மற்றும் கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனை செய்தனா்.
காரைக்காலில்...
இதுபோல காரைக்காலில் சாகா் கவாச் ஒத்திகைப் பணியை போலீஸாா் புதன்கிழமை தொடங்கினா்.
கடலோரக் காவல்நிலைய போலீஸாா் மற்றும் அனைத்து காவல்நிலைய அதிகாரிகள், காவலா்கள் புதன்கிழமை காலை 6 மணி முதல் காரைக்கால் பிராந்தியத்தில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனா்.
கடற்கரைப் பகுதியில் படகுகள் போக்குவரத்தை கண்காணித்தனா். மேலும் மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா். திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலிலும் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினா்.
