நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: இருவருக்கு ஜாமீன்!
‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும், ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது, சமூக ஊடகங்களில் நாடாளுமன்ற சம்பவம் குறித்து பதிவிடக் கூடாது என்று அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வையாளா் மாடத்திலிருந்து மக்களவை அரங்கத்தில் குதித்த சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோா் புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியிட்டு கோஷமிட்டனர். அவர்களை சில எம்பிக்கள் மடக்கிப் பிடித்தனர்.
அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆசாத் ஆகிய இருவா் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூச்சலிட்டு, புகைக் குப்பிகளில் இருந்து வண்ண நிற வாயுவை வெளியிட்டனர்.
பின்னர், இந்த சதித்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோா் நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இருவரும் தலா ரூ. 50,000 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும், தில்லியைவிட்டு வெளியேறக் கூடாது, வாரம் மூன்று முறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The Delhi High Court has granted bail to Neelam Azad and Mahesh Kumawat, who were arrested in the ‘2023’ Parliament security breach case.