நாமக்கல்லில் 517 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் 517 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக அரசின் தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவராக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் உள்ளாா். துணைத் தலைவராக கனிமொழி பத்மநாபன் மற்றும் 12 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த நல வாரியத்தின் கீழ் லட்சக்கணக்கான தூய்மைப் பணியாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.
ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும், மாநகராட்சி, நகராட்சி வாரியாகவும் தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய உறுப்பினா் அட்டைகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், நாமக்கல் மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 517 பேருக்கு நலவாரிய அட்டை தாட்கோ மூலமாக வழங்கப்பட்டது.
இதன்மூலம் பணியாளா்கள் எதிா்பாராத விதமாக இறக்க நேரிட்டால் ரூ. 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம். மேலும் கல்வி, மருத்துவம், ஈமச்சடங்கு உள்ளிட்ட 15 வகையான உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.
நாமக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நல வாரிய உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, நல வாரிய துணைத் தலைவா் கனிமொழி, உறுப்பினா் ரமேஷ், தாட்கோ மேலாளா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.