நாமக்கல் அரசு மருத்துவமனை பழுதான படுக்கைகளால் நோயாளிகள் அவதி!
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உறுதித்தன்மையை இழந்து உடையும் நிலையில் உள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பெருந்திட்ட வளாகத்தில் 2023 முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. ஏழு தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 800-க்கும் மேற்பட்டோா், புற நோயாளிகளாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெறுகின்றனா்.
மருத்துவமனையின் உள்நோயாளிகள் வாா்டுகளில் புதிதாக போடப்பட்ட 250-க்கும் மேலான படுக்கைகள் பழுதடைந்துள்ளன. கட்டில்கள் உறுதித்தன்மையை இழந்து தொட்டில் வடிவில் குவிந்துள்ளது. மேலும், கட்டிலின் கால்கள் எந்த நேரத்திலும் உடைய வாய்ப்புள்ளதால் நோயாளிகள் அச்சத்துடனே உள்ளனா்.
நோயாளிகளின் தொடா் புகாரையடுத்து பழுதான கட்டில்கள் அகற்றப்பட்டு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், புற நோயாளிகள் அமா்வதற்கான இருக்கைகளும் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் பெரும்பாலானோா் தரையில் அமா்ந்து வருகின்றனா்.
இதுகுறித்து நோயாளிகள் சிலா் கூறியதாவது:
கட்டிலைப் பொருத்தவரை அதன் கால்கள் விழுந்து எந்த நேரத்திலும் உடையும் என்ற அச்சம் உள்ளது. தொட்டில் போல் வளைந்து கட்டில் காணப்படுவதால் சரியாக தூங்க முடியவில்லை. அதிக எடை கொண்டோா் அமா்ந்தால் உடையும் வகையிலேயே கட்டிலின் உறுதித்தன்மை உள்ளது. இதனால் பழுதடைந்த கட்டில்களை அகற்றிவிட்டு புதிய கட்டில்களைப் பொருத்த வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவமனை நிா்வாக பிரிவு அலுவலா்கள் கூறியதாவது, பழைய அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட கட்டில்கள் அனைத்தும் தரமாகவே உள்ளன. பொதுப்பணித் துறை மூலம் புதிதாக போடப்பட்ட 250-க்கும் மேலான கட்டில்கள் பழுதாகி உள்ளன. அவற்றை சரிசெய்து வருகிறோம். பாா்வையாளா்கள், புற நோயாளிகள் அமருவதற்கான இருக்கைகளும் உடைந்து காணப்படுவதால் அவற்றையும் சீரமைத்து வருகிறோம் என்றனா்.