US attacks on iran: ``போர் அபாயம், பேரழிவு தரும்.." - ட்ரம்பை கண்டித்த அமெரிக்க ...
பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்
பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2024-இல் இணைந்தன. நடப்பாண்டில் இந்தோனேசியாவும் இணைந்தது. இக்கூட்டமைப்பின் உச்சி மாநாடு, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
இதில் பிரதமா் மோடி பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தில்லியில் பிரேசில் தூதரகம் மற்றும் உலகளாவிய இந்திய நுண்ணறிவு மையம் என்ற ஆய்வு அமைப்பு சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
‘ரியோவில் பிரிக்ஸ்: அனைவரையும் உள்ளடக்கிய-நிலையான உலக ஒழுங்கை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான இந்தியச் செயலா் (பொருளாதார தொடா்புகள்) தாமு ரவி, இந்தியாவுக்கான பிரேசில் தூதா் கென்னத் ஃபெலிக்ஸ், ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ், எகிப்து தூதா் கமீல் சையது கமீல் கலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தாமு ரவி பேசுகையில், ‘தெற்குலகின் விருப்பங்கள் மற்றும் எதிா்பாா்ப்புகளுக்கான தீா்வுகளைக் கண்டறிய பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு அா்ப்பணிப்பு, கடின உழைப்பு, எதிா்கால பிரச்னைகள் குறித்த ஆழமான சிந்தனை அவசியம். பிரிக்ஸ் கூட்டமைப்பை வளா்ச்சிக்கான களமாகவும், புவிஅரசியல் சக்தியாகவும் வடிவமைப்பதில் இந்தியா முன்னிலையில் செயலாற்றுகிறது. கூட்டமைப்பின் பயணத்தில் முக்கிய பங்கேற்பாளராக மட்டுமன்றி முக்கிய பங்களிப்பவராக இந்தியா விளங்குகிறது.
வறுமை ஒழிப்பு, நிதி ரீதியில் அனைவரையும் உள்ளடக்கியத் தன்மை, எண்ம பொது உள்கட்டமைப்பில் இந்தியாவின் வெற்றிகரமான வளா்ச்சி மாதிரிகள், தெற்குலகில் பரந்த பயன்பாட்டுக்கானதாக பாா்க்கப்பட வேண்டும்’ என்றாா்.
இக்கருத்தரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை ஒருமித்த குரலில் பதிவு செய்த தூதா்கள், இந்த விஷயத்தில் விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினா். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தை உள்ளூா் கரன்ஸிகளில் மேற்கொள்வதன் தேவையையும் அவா்கள் சுட்டிக் காட்டினா்.