குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
பலத்த காற்று: மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை
கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடலில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஏப்ரல் 14- ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவித்துள்ளது. இந்த தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன்14) நிறைவுபெற்று, நள்ளிரவு முதல் மீன்பிடிக்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 590 விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் இருந்தனா்.
இந்தநிலையில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் கூறியது:
தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், ஜூன் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி. மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை மண்டல ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மாவட்டத்தில் நாகூா், மேலபட்டினச்சேரி, நாகூா் பட்டினச்சேரி, நம்பியாா் நகா், சாமந்தான்பேட்டை, நாகப்பட்டினம் ஆரிய நாட்டுத் தெரு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லாா், வேளாங்கண்ணி, செருதூா், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, கோடியக்காடு, சிந்தாமணிக்காடு, மணியன்தீவு, கோவில்தாவு, பன்னாள், செருதலைக்காடு, வாய்மேடு, அண்ணப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள், மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை ஆழ்கடல் செல்ல மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் டோக்கன்கள் வழங்கப்படமாட்டாது என்றாா்.