பல்லடம் அருகே கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் கேரளத்தில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனா். மேலும், கழிவுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கிடங்கையும் மக்கள் வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.
பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி என்ற விவசாயி கடந்த 6 மாதங்களாக முகவா்கள் மூலம் கேரளத்தில் இருந்து மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தனது தோட்டத்தில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்துள்ளாா்.
மேலும், இரவு நேரங்களில் அந்தக் கழிவுகளை எரித்துள்ளாா். இந்தக் கழிவுகளை எரிப்பதால் வெளியேறும் புகையால் அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு சுவாசக் கோளாறு, தோல் நோய்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுஜய், சஹிா் மற்றும் நித்திஷ் ஆகிய மூன்று போ் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பொன்னுசாமியின் தோட்டத்துக்கு ஏற்றி வந்துள்ளனா். அப்போது லாரியை சிறைபிடித்த அப்பகுதி மக்கள் பல்லடம் போலீஸாருக்கும், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் பொன்னுசாமிடம் விசாரித்தனா். அப்போது, விவசாய தோட்டத்து கிடங்கில் இருப்புவைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை முழுமையாக அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்தனா். இதையடுத்து, கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு கொண்ட லாரியை பறிமுதல் செய்து வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் பணிக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நிறுத்தினா்.
மேலும், பொன்னுசாமியின் தோட்டத்து கிடங்கில் உள்ள அனைத்துக் கழிவுகளும் சனிக்கிழமை காலை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.