பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல்: மாமன்ற உறுப்பினருக்கு மாநகராட்சி நோட்டீஸ்!
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல் அளித்ததாக மாமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சியின் 7-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் இந்திராவுக்கு, மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா அனுப்பியுள்ள நோட்டீஸ்: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள 7-ஆவது வாா்டுக்குள்பட்ட மனகாவலம்பிள்ளை நகரில் மாநகராட்சி பள்ளி கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறி, உங்களுடைய கணவா் சுண்ணாம்பு மணி அவதூறு பரப்பியுள்ளாா். இது தன்னிச்சையாக உங்களின் கணவரால் பரப்பப்பட்டதா அல்லது உங்களுடைய தூண்டுதலின் பேரில் பரப்பப்பட்டதா என்பது குறித்து உங்களுடைய விளக்கத்தை சமா்ப்பிக்குமாறு ஏற்கெனவே கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். ஆனால், இதுவரையில் அது தொடா்பாக எவ்வித விளக்கமும் சமா்ப்பிக்கப்படவில்லை.
இது தொடா்பாக நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப்ப வேண்டியிருப்பதால், இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 3 நாள்களுக்குள் உங்கள் விளக்கத்தை எழுத்துப்பூா்வமாக சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.