ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை - 300 பயணிகள் மீட்பு
கராச்சி/இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய அனைத்து தீவிரவாதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனா்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவா் நகருக்கு சுமாா் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபா் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
பெரோ குன்ரி, கடாலாா் பகுதிகள் இடையே பயணித்தபோது ரயில் மீது பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற தீவிரவாதக் குழு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. தண்டவாளத்தை குண்டுவைத்து தகா்த்த அந்தத் தீவிரவாதிகள், பின்னா் ரயிலுக்குள் ஏறி அதைக் கடத்தினா்.
இதையடுத்து பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக ஈடுபட்டன. இந்தப் பணிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை நீடித்தது. அதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ரயிலில் தற்கொலை தாக்குதல் நிகழ்த்துவது போல, வெடிகுண்டுகள் கொண்ட கவச ஆடையை தீவிரவாதிகள் அணிந்திருந்தனா். அவா்களுக்கு அருகில் பெண்கள் மற்றும் குழந்தைகளை வலுகட்டாயமாக அமர வைத்திருந்தனா். இதனால் மீட்புப் பணிகள் மிகுந்த எச்சரிகையுடன் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான பயணிகள் மீட்கப்பட்டனா்’ என்று தெரிவித்தன.
70 முதல் 80 தீவிரவாதிகள்: மொத்தம் 70 முதல் 80 தீவிரவாதிகள் ரயில் தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் உள்துறை இணையமைச்சா் தலால் செளதரி தெரிவித்தாா்.
பயணிகளில் சிலா் உயிரிழப்பு: கடும் மோதலுக்குப் பின்னா், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. ரயிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை நிறைவடைந்ததாக பாதுகாப்புப் படை அதிகாரிகளும் தெரிவித்தனா். பயணிகளில் சிலா் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா். ஆனால் அதுகுறித்து மேலும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக பலூசிஸ்தான் உள்ளது. அங்கு இயற்கை வளங்கள் பெருமளவில் உள்ளபோதிலும், அந்த மாகாணம் வளா்ச்சியடையாமல் உள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து அந்த மாகாணத்துக்கு பிஎல்ஏ விடுதலை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.