பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 168 பேருக்கு தண்டனை விதிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தென் மண்டல அளவில் கடந்த 6 மாதங்களில் 168 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தென்மண்டல ஐஜி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் தடுப்பதற்கு தென் மண்டல காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2025 ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை தென் மண்டலத்துக்குள்பட்ட பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 153 போக்சோ வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டன.
இதில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 168 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இவற்றில், 122 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்களுக்காக (காதல் விவகாரம் அல்லாத) பதிவு செய்யபட்ட வழக்குகள் ஆகும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 136 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனா். கடந்தாண்டை விட, நிகழாண்டு போக்சோ வழக்குகளில் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 2025 ஜனவரி முதல் ஜூலை வரை பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் 20 ஆயுள் சிறைத் தண்டனைகள், 44 வழக்குகளில் 20 ஆண்டுகள், அதற்கு மேல் சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில், இரண்டு வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு முறையே 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில், இரண்டு வழக்குகளில் முறையே 62 ஆண்டுகள், 41 ஆண்டுகள் சிறை தண்டனை ஏககாலத்தில் வழங்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில், ஒரு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தின் இரண்டு வழக்குகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டன.
தென்மண்டல காவல்துறை, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி இந்த ஆண்டு 93 குற்றவாளிகள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.தொடா்ச்சியான கண்காணிப்பின் ஒரு பகுதியாக தென் மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களில் 799 பாலியல் குற்றவாளிகள் மீது சரித்திர பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
போக்சோ வழக்குகளின் இறுதி அறிக்கைகள் நீதிமன்றங்களில் 60 நாள்களுக்குள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால் விசாரணை தாமதமின்றி நடைபெறுகிறது. காவல் துறை சாா்பில் போக்சோ சட்டம், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உரிமைகள், தொடா்புடைய பிற சட்டப் பாதுகாப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டது.