பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இனப் பாகுபாடு!
பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண் ஒருவரை அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலில் இனரீதியாக அவதூறாகப் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லும் ரயிலில் கடந்த ஞாயிறன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்ரியல் ஃபோர்சித் என்ற பெண் பயணம் மேற்கொண்டார். இவர் தனது சக பயணியிடம் பேசிக் கொண்டிருக்கையில், தான் அகதிகளு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட மற்றொரு பயணி திடீரென ஆத்திரப்பட்டு இன ரீதியான வெறுப்புப் பேச்சுகளால் கூச்சலிட்டார். மது அருந்திய நிலையில் அவர் இவ்வாறு பேசியதால் அந்தப் பெண் அவர் பேசியதை தனது செல்போனில் பதிவு செய்தார்.
இதையும் படிக்க | பாலஸ்தீன குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!
அதில், “நீங்கள் இங்கிலாந்தில் இருப்பதால் இவ்வாறு உரிமை கோறுகிறீர்கள். இங்கிலாந்தில் இல்லையென்றால் துபோன்று உரிமை கோர முடியாது. ஆங்கிலேயர்கள் உலகினை வென்று உங்களிடம் திருப்பிக் கொடுத்தார்கள். நாங்கள் இந்தியாவைக் கைப்பற்றினோம். நாங்கள் அதை விரும்பவில்லை. எனவே, உங்களிடம் திருப்பிக் கொடுத்தோம்” என்று தொடர்ந்து பேசிய அவர் தகாத வார்த்தைகளால் அந்தப் பெண்ணைத் திட்டினார்.
இதுகுறித்துப் பேசிய ஃபோர்சித் "அவர் 'அகதி' என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஆத்திரமடைந்தார். அது மிகவும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. அவர் சொன்னது தவறு என்று நான் உணர்ந்தேன். எனது பாதுகாப்பிற்காக நான் அதைப் பதிவு செய்தேன்" என்று கூறினார்.
மேலும், அந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியான பின்னர் பல அவதூறுகளை ஃபோர்சித் எதிர்கொண்டார்.
"இந்த ஒரு விடியோவிலிருந்து நான் பெற்ற வெறுப்பின் அளவு மோசமானது. நான் இதுவரை கேட்காத அவதூறு வார்த்தைகளை எல்லாம் எதிர்கொண்டேன். வன்முறை, வெறுப்புப் பேச்சு இப்போது எக்ஸ் தளத்தில் மிக எளிதாகப் பெருகி வருகிறது. இந்த நாட்டில் நிறம் தொடர்பான பாகுபாட்டுக்கு ஆளாகும் மக்களின் உரிமைகள் குறித்து நான் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். மேலும் அதில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் போக்குவரத்துக் காவல்துறையில் ஃபோர்சித் புகாரளித்துள்ளார்.