பிளஸ் 2 முடிவுகள்: 30வது இடத்தில் கரூர்!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 30வது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று (மே 8) வெளியாகியுள்ள நிலையில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 30வது இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 103 பள்ளிகளைச் சேர்ந்த 4,656 மாணவர்கள், 5,401 மாணவிகள் என மொத்தம் 10,053 பேர் 45 தேர்வு மையங்கள் மூலம் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகளானது இன்று (மே 8) வெளியான நிலையில், அதில் கரூர் மாவட்டம் 93.66 சதவிகிதம் தேர்ச்சியடைந்து 30வது இடத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த 4,238 பேர் மாணவிகள் 5,178 பேர் என மொத்தம் 9,416 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதில், 1,939 மாணவர்கள் மற்றும் 2,702 மாணவிகள் என மொத்தம் 4,641 பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள்.
மேலும், கரூரிலுள்ள பள்ளிகளில் சுமார் 25 பள்ளிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டில் கரூர் மாவட்டம் சுமார் 95.9 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று 12வது இடத்தைப் பிடித்த நிலையில் இந்தாண்டு (2025) சரிந்து 93.66 சதவிகித தேர்ச்சியில் 30வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:பிளஸ் 2 முடிவுகள்: அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்!