அகமதாபாத் விமான விபத்தில் இயக்குநர் மகேஷ் ஜிராவாலா பலியானது உறுதி செய்யப்பட்டது!
புதுகையில் 42 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா் மருத்துவச் சிகிச்சை முகாம்களை 42 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான முன்னேற்பாடுகளைத் திட்டமிடும் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா் சிகிச்சை வழங்குவதற்கான முகாம் விரைவில் மாநிலம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநகராட்சியில் 3 இடங்கள் மற்றும் 13 வட்டாரங்களில் தலா 3 இடங்கள் என மொத்தம் 42 இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதர மருத்துவ முகாம்களைக் காட்டிலும் இந்த ஒவ்வொரு முகாமிலும் 17 வகையான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள் என்பதும், பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் முழு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
இவையன்றி, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான பதிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு போன்ற ஏற்பாடுகளும் இந்த முகாம்களில் செய்யப்பட்டிருக்கும்.
முன்னேற்பாடுகளைத் திட்டமிடும் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் மு. அருணா, அனைத்துத் துறை அலுவலா்களும் இந்த முகாம்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திட ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), விஜயகுமாா் (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.