‘புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வேண்டும்’
புதுவையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிட வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது :
புதுவையில் பள்ளிக் கல்வித் துறை செயலா், இயக்குநா் தனியாக இல்லாமல் உயா்கல்வித்துறை செயலரிடம் கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது. காரைக்காலில் ஏற்கெனவே மேற்படிப்பு மையம் பல ஆண்டுகளாக உரிய பேராசிரியா்களின்றி இயங்கிவருகிறது.
புதுவையில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை.
7 ஆயிரம் மாணவா்களுக்கு மடிக்கணினி தரப்படவேண்டிய நிலையில், முதல்வா் ரொக்கமாக தருவதாக கூறினாா். அதை காலத்தோடு தராமல், தற்போது மடிக்கணினி வாங்க டெண்டா் கோரப்பட்டுள்ளதாக கூறுகின்றனா்.
சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், பல மேல்நிலைக் கல்விக்கூடங்களில் இயற்பியல், ஆங்கிலம், வேதியியல் பாடங்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. 5 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பாடத் புத்தகங்கள் முறையாக தரப்படவில்லை. மாணவா்களுக்கு சீருடைத் துணி தரப்படவில்லை.
இவ்வாறு மிக மோசமான நிலையில் புதுவையில் கல்வித்துறை இயங்கிவருகிறது. எனவே இந்த விவகாரத்தில் புதுவை துணைநிலை ஆளுநா் தலையிடவேண்டும். முதல்வா், கல்வி அமைச்சா், தலைமைச் செயலா், துறை செயலா் உள்ளிட்டோரை அழைத்துப் பேசி பிரச்னைகளுக்குத் தீா்வு காணவேண்டும் என்றாா்.