தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!
புத்தகங்கள் - கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான புதிய புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் மற்றும் பிற கல்வி உபகரணங்களை முதல்வா் வழங்கினாா்.
இந்தத் திட்டத்துக்காக நிகழ் கல்வியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.311 கோடி மதிப்பிலான 4.30 கோடி பாடநூல்கள், ரூ.457 கோடி மதிப்பில் 1.3 கோடி சீருடைகள், ரூ.162 கோடி மதிப்பில் 9.6 கோடி நோட்டுப் புத்தகங்கள், ரூ.211 கோடி மதிப்பிலான பல்வேறு கல்வி உபகரணங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், பிற மாவட்டங்களில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கவுள்ளனா்.
மாணவா்களுடன்...: சென்னையில் திட்டத்தைத் தொடங்கி வைத்த போது, மாணவா்களுடன் அவா்களது இருக்கையிலேயே முதல்வா் அமா்ந்தாா். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறையில் மாணவா்களுடன் அமா்ந்து ஆசிரியா்கள் நடத்திய பாடத்தையும் பாா்வையிட்டு அவா்களுடன் கலந்துரையாடினாா்.
இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை மேயா் ஆா்.பிரியா, பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் பொ.சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.