விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆ...
தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" - உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?
இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உப்பிற்குத் தனி மவுசு உண்டு.
தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது.
இத்தொழிலில் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், ஆண்களை விடப் பெண் தொழிலாளர்களே அதிகம். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தூத்துக்குடியிலிருந்து வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது உப்பு உற்பத்தி பாதிப்பினால் குஜராத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
குஜராத்திலிருந்து 40 ஆயிரம் டன் உப்பு தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்களிடம் பேசினோம், “கடந்த ஆண்டு பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உப்பளத் தொழிலாளர்களும் உப்பு உற்பத்தியாளர்களும் பொருளாதார இழப்பைச் சந்தித்தனர்.
இந்த ஆண்டும் பருவம் மாறி தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்க வேண்டிய உப்பு உற்பத்தி மே மாதம்தான் தொடங்கி உள்ளது.

குஜராத்திலிருந்து கப்பல்களில் 40 ஆயிரம் டன் எனக் கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுவதால், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பருவம் தவறி அடிக்கடிப் பெய்த மழை, சாதகமில்லாத வானிலை, போதிய வெயில் இன்மை உப்பு போன்றவற்றால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உப்பளங்களில் உப்புத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, வெயிலில் ஆவியாகும் நிலையில், மழை பெய்தால் அது உப்புத் தண்ணீரை நீர்த்துப்போகச் செய்து உப்பு விளைச்சலைக் கடுமையாகக் குறைகிறது.
இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்களிடம் சுமார் 100 டன் முதல் 200 டன் வரையிலும், பெரிய உப்பு உற்பத்தியாளர்களிடம் சுமார் 500 முதல் 1,000 டன் வரையிலான உப்பு விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது.

இதனால், உப்பளத் தொழிலாளர்களும், உப்பு உற்பத்தியாளர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தூத்துக்குடி மாவட்டத்தின் முதன்மை தொழிலான உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலும் இதனை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தூத்துக்குடியில் குஜராத் உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்க வேண்டும்” என்றனர்.