நூற்றாண்டு கடந்த சிவகாசி பட்டாசு: புவிசார் குறியீடு வழங்கிட பட்டாசு உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்
’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று தீப்பெட்டித் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு 1923-ம் ஆண்டு சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலையைத் தொடங்கினர். தீப்பெட்டித் தொழிலின் நீட்சியாக பட்டாசு உற்பத்தித் தொழில் தொடங்கப்பட்டது.

சிவகாசி மற்றும் சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 1923-ம் ஆண்டு முதல் மத்தாப்பூ, ஓலைவெடி, சரவெடி உள்ளிட்ட சிறிய ரக பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது 300-க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிறிய மற்றும் பெரிய அளவில் 1,080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சிவகாசியில்தான் உள்ளன.
இப்பட்டாசுத் தொழிலின் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்களைவிட பெண் தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவிகிதத்திற்கும் மேல் உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், பட்டாசுகளை கப்பலில் கொண்டு செல்வதற்கான அனுமதி இல்லாததால் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், ”டான் பாமா” எனப்படும் தமிழ்நாடு பட்டாசு-கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டு அலுவலகத்தில் உற்பத்தி பொருட்கள் பிரிவின் கீழ் கைகளால் உற்பத்தி செய்யப்படும் சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் ஶ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, சம்பா வத்தலுக்கு அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்தில் அடையாளமான சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்து உள்ளது தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டான்பாமா தலைவர் கணேசன் கூறுகையில், “சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் முன்னுரிமை கிடைக்கும். இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகி சீன பட்டாசுகள் ஒழிக்கப்பட்டு, சிவகாசி பட்டாசுக்கு சந்தையில் மதிப்பு மேலும் உயரும். மேலும் பட்டாசு தொழிலின் பாதுகாப்பு மற்றும் தரம் அதிகரிக்கும்” என்றார்.