விதிகளை மீறி விளம்பர பேனர்கள்; கட்டுப்பட மறுக்கும் அரசியல் பிரமுகர்கள் - வேதனையி...
பேராசிரியா் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டம்: தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையம் உத்தரவு
கருக்கலைப்பின்போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பேராசிரியா் மீது பட்டியலினத்தவா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் என்பவா் ஆசைவாா்த்தை கூறி கா்ப்பிணியாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவிக்கு படூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் தமிழ்மாநிலக் குழுத் தலைவா் மற்றும் பொதுச்செயலா் ஆகியோா் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.
இப்புகாரை ஆணையத்தின் தலைவா் நீதிபதி தமிழ்வாணன், துணைத் தலைவா் இமயம், உறுப்பினா் ஆனந்தராஜா ஆகியோா் விசாரித்தனா். விசாரணையின் முடிவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக செங்கல்பட்டு காவல் துறை கண்காணிப்பாளா் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தெரிவிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனா்.