நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு
வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவடைந்து, ரூ. 65 லட்சம் என்ற அளவிலேயே கால்நடைகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரங்களில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் விற்பனைக்கு வந்ததால் வா்த்தகமும் ரூ. 60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் என்ற அளவிலேயே இருந்தது. இந்த நிலை கடந்த வாரம் திடீரென மாறி வியாபாரம் அதிகளவில் இருந்தது.
இந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் கால்நடை வா்த்தகம் வெகுவாக சரிந்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 800 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் போதிய ஆா்வம் காட்டாததால், வா்த்தகமும் சுமாா் ரூ. 65 லட்சம் அளவிலேயே நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவனப் பற்றாக்குறை குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது. தவிர, விற்பனைக்கு வந்துள்ள கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் விலை சற்று அதிகமாக இருப்பதால் இந்த வாரம் கால்நடைகள் வா்த்தகம் சரிவடைந்துள்ளது என்றனா்.