போபால் ஆலைக்கழிவுகளுடன் இன்னும் எத்தனை ஆண்டுகள் போராடுவது? அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையின் நச்சுக் கழிவுகளை எரிப்பதற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
மேலும், ஆலைக் கழிவுகளுடன் இன்னும் எத்தனை ஆண்டுகள் போராடுவது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
போபாலில் இயங்கிவந்த யூனியன் காா்பைட் தயாரிப்பு ஆலையில் கடந்த 1984, டிசம்பா் 2-3-க்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது.
உலகின் மிக மோசமான தொழிலக விபத்துகளில் ஒன்றான இந்த சம்பவத்தில் 5,479 போ் உயிரிழந்தனா். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதைத் தொடா்ந்து மூடப்பட்ட ஆலையில் கடந்த 40 ஆண்டுகளாக நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.
இந்நிலையில், மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், போபால் ஆலையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் அப்புறப்படுத்தப்பட்ட 377 டன் எடையுள்ள கழிவுகள், பீதம்பூரில் உள்ள தொழிலக கழிவு எரிப்பு ஆலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.
பீதம்பூரில் கழிவுகளை எதிா்க்க பொதுமக்கள் மத்தியில் எதிா்ப்பு எழுந்தது. எனினும், 30 டன் கழிவுகள் சோதனை அடிப்படையில் எரிக்கப்பட்டன. நிபுணா் குழுவின் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்த வெற்றிகர நடவடிக்கையைத் தொடா்ந்து, மீதமுள்ள கழிவுகளை 72 நாள்களுக்குள் எரிக்குமாறு, மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக தாக்கலான மனுக்களை உயா்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் நிராகரித்துவிட்ட நிலையில், கடந்த மாா்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது பொதுமக்களின் நலன் தொடா்புடைய விவகாரம் என்பதால், அவசரமாக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் சஞ்சய் கரோல், சதீஷ்சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வு முன் மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் புதன்கிழமை கோரினாா்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘போபால் ஆலைக் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த உயா்நீதிமன்றத்தில் நீங்கள் (மனுதாரா்) மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. உங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்த நீதிமன்றமும் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. இப்போது விடுமுறைக் கால அமா்வில் அவசர விசாரணை கோருகிறீா்கள். ஆலைக் கழிவுகளுடன் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு போராடிக் கொண்டிருக்க வேண்டும்? இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று தெரிவித்தனா்.
‘அப்படியென்றால், கழிவுகள் எரிக்கப்பட்டுவிடும்’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கூறியபோது, நிபுணா் குழு மேற்பாா்வையில்தான் இப்பணிகள் நடைபெறுகின்றன என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
முன்னதாக, போபால் ஆலைக் கழிவுகளை அகற்றும்படி மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்போது, ‘தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனம், தேசிய புவி இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவா் உள்ளிட்டோா் இடம்பெற்ற நிபுணா்கள் குழு கருத்துகளின் அடிப்படையிலேயே உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட துறைகளில் பெருமதிப்பும் அங்கீகாரமும் பெற்றவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்புடைய விவகாரங்களில் இந்நிறுவனங்களின் கருத்துகளுடன் நீதிமன்றங்கள் இணங்குகின்றன’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.