போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்தது என்ன?
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்சேர்ந்த கவிதா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார் கவுன்சிலில் 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் தங்கள் பதிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மாற்றுவதற்கு கடந்த 28.04.2022-ல் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவர்களின் ஆவணங்களை டெல்லி பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது. மேற்படி விண்ணப்பதாரர்கள் புது டெல்லியில சட்டப்படிப்பு முடித்ததாக சமர்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை கண்டறிய அவர்களின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது இருவரின் கல்வி சான்றிதழ்களும் போலியானது என தெரியவந்தது.
போலி ஆவணங்களுடன் பார் கவுன்சிலில் பதிவு செய்ய வந்திருந்த கவிதா, மற்றும் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில்குமார் புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்ததில், மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் போலியாக சான்றிதழ்கள் உருவாக்கியது உறுதியானதால் கவிதா, கிருஷ்ணமூர்த்தி இருவரையும் கடந்த 14 ஆம் தேதி பார்கவுன்சில் அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து டெல்லி பார்கவுன்சில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.