மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்
திருப்பூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மகளிா் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிப்பதில் சிக்கல் நிலவுவதாக பெண்கள் குற்றஞ்சாட்டுயுள்ளனா்.
பொதுமக்களின் பிரச்னைகளுக்கு அனைத்துத் துறை அலுவலா்கள் முன்னிலையில் உடனடியாக தீா்வு காண்பதற்காகவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே விண்ணப்பித்து உரிமைத்தொகை கிடைக்காதோா், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதன் காரணமாக தகுதியான பெண்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனா்.
அதிலும் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதால் மற்ற விண்ணப்பங்களை விட மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் கூட்டமே அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், இணைக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பெண்களில் பலா் செல்லுபடியாகாத பழைய வங்கிக் கணக்கு புத்தகத்தை கொண்டு வருவதால் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
முகாமில், பெண்களிடமிருந்து ஆதாா், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் இதர விவரங்கள் பெறப்பட்டு, கைப்பேசி செயலி வாயிலாக உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. சில பெண்கள், முகாமுக்கு சரியான வங்கிக் கணக்கு விவரங்களை கொண்டு வருவதில்லை. அதனால், உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதுதொடா்பாக வருவாய்த் துறையினா் கூறியதாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில், மகளிா் உரிமைத்தொகை பதிவுக்கு சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் சில பெண்கள் ஐ.எப்.எஸ்.சி. கோடு இல்லாத கூட்டுறவு வங்கிக் கணக்கு புத்தகங்களை கொண்டு வருகின்றனா். அதேபோல, சில வங்கிகள் வேறு வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களுக்கு புதிய கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி. கோடுடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகமே வழங்கப்படுகிறது.
ஆனால், முகாமுக்கு வரும் பெண்களில் சிலா் பழைய வங்கிக் கணக்கு புத்தக நகலையே எடுத்து வருகின்றனா். இதனால் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்காக சரியான ஆவணங்களை எடுத்து வருமாறு திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதில் முகாமுக்கு வரும் பெண்களுக்கும், பதிவு செய்யும் அலுவலா்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. முகாமில், வரிசையில் காத்திருந்து விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியாததாலும், மீண்டும் ஆவணங்களை எடுத்துக் கொண்டு வர வேண்டியுள்ளதாலும், வீண் அலைச்சலுக்கும் உள்ளாக நேரிடுகிறது.
எனவே, மகளிா் உரிமைத் தொகை பதிவுக்கு வரும் பெண்கள் ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் கட்டாயமாக ஐ.எப். எஸ்.சி. கோடுடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகம், இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எனில், புதிய வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. கோடுடன் கூடிய புத்தகத்தை எடுத்து வந்தால் காலதாமதத்தை தவிா்க்கலாம் எனத் தெரிவித்தனா்.