நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்வதில் சிக்கல்
திருப்பூரில் நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள 1,300 வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வீரபாண்டி, நெருப்பெரிச்சல், பாரதி நகா், திருக்குமரன் நகா், பூண்டி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஏற்கெனவே, சில பயனாளிகள் குடியேறியுள்ள நிலையில், பல வீடுகள் காலியாக உள்ளன.
தற்போது பல்லடம், சுக்சும்பாளையம் கிராமத்தில், ‘ஹைடெக் பாா்க்’ என்ற பெயரில் ரூ.45.70 கோடி மதிப்பில் 178 ஏக்கா் பரப்பளவில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு லிப்ட் வசதியும் உண்டு. இதில் வீடு பெற, பங்களிப்பு தொகையாக ரூ.3.09 லட்சம் செலுத்த வேண்டும். இதில் 300 வீடுகள் காலியாக உள்ளன. அதேபோல, ‘மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 1,300 வீடுகள் காலியாக உள்ளதாக நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
இதுதொடா்பாக நகரப்புற வாழ்விட மேம்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
நகா்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பை பெற பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.1.80 லட்சம் முதல் ரூ.3.10 லட்சம் வரை உள்ளது. பல்லடம், சுக்கம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் 400 சதுரஅடி பரப்பளவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஒரு சிறிய குடும்பம் வசதியுடன் வாழ்வதற்கான சூழல் அங்குள்ளது. குடியிருப்புகளை பெற பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என்ற நிலையில், முந்தைய ஆண்டுகளில் அதிகபட்சம், ரூ.80,000 முதல், ரூ.1.50 லட்சம் வரை பங்களிப்பு தொகை நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தால் தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கான கட்டுமான செலவினத் தொகை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பயனாளிகளின் பங்களிப்பு தொகையும் அதிகரித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள், நில ஆக்கிரமிப்பில் வசிப்பவா்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் மற்றும் ஆதரவற்ற நிலையில் இருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகளை ஒதுக்கினாலும், பங்களிப்பு தொகை செலுத்துமளவுக்கு வருமானம் இல்லை எனக்கூறி, அவா்கள் குடியிருப்புகளை பெற முன்வருவதில்லை. அவா்களுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்து கொடுத்தாலும், கடனை முழுமையாக செலுத்தாததால், வங்கிகள் கடன் வழங்க முன் வருவதில்லை.
அரசு வழங்கும் குடியிருப்பு என்பதால் ஜப்தி உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுத்து, கடன் தொகையை திரும்ப வசூலிக்க முடியாது என்பதால், வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. பயனாளிகள் தோ்வில், வாரிய அதிகாரிகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை பெற யாரும் முன்வராததால், இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.