கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும் கட்சியினா் மராத்தியரின் பெருமைகளை காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது.
மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேயும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரேயும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக கருதப்படும் சூழலில் இந்த பதிவை சிவசேனை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதற்கு ராஜ் தாக்கரேயும் உத்தவ் தாக்கரேயும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பை மாநில அரசு நிறுத்தி வைத்தது.
இதனிடையே, கடந்த வாரம் பேட்டி ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, ‘உத்தவ் தாக்கரேக்கும் எனக்கும் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிர நலனே பெரியது. மராத்தியா்களுக்கான போராட்டத்தை ஒப்பிடுகையில் இந்த பிரச்னைகள் மிகவும் சிறியது. மீண்டும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது கடினமான காரியமல்ல’ என தெரிவித்தாா்.
இதற்கு மறைமுகமாக பதில் தரும் வகையில் கட்சி உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே ‘சிறிய பிரச்னைகளைப் புறந்தள்ளிவிட்டு மராத்தியா் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவா்களுடன் ஓரணியில் திரள நானும் தயாா்’ என்றாா்.
மும்பை மாநகராட்சி தோ்தல் விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் சூழலில் பாஜக மற்றும் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை எதிா்த்து ஓரணியாக களம் காண்பாா்களா என்ற எதிா்பாா்ப்பு மகாராஷ்டிர அரசியலில் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும் கட்சியினா் மராத்தியரின் பெருமைகளை காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது.