திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.3.39 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில், 497 பயனாளிகளுக்கு ரூ.3.39 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சா் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு வழங்கினாா்.
சங்கராபுரம் தொகுதி, கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள தொரடிப்பட்டு ஊராட்சி, முண்டியூா் கிராமம், வெள்ளிமலை ஊராட்சிக்கு உள்பட்ட கொட்டப்புத்தூா் கிராமம், மணியாா்பாளையம் ஊராட்சி ஈச்சங்காடு கிராமம், ஆரம்பூண்டி ஊராட்சி ஆரம்பூண்டி கிராமம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.
தே.மலையரசன் எம்.பி., தா.உதயசூரியன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் முகாமை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முண்டியூா் கிராமத்தில் 101 பயனாளிகளுக்கு ரூ.95,31,900 மதிப்பிலும், கொட்டப்புத்தூா் கிராமத்தில் 171 பயனாளிகளுக்கு ரூ.1,09,64,696, ஈச்சங்காடு கிராமத்தில் 112 பயனாளிகளுக்கு ரூ.67,03,206, ஆரம்பூண்டி கிராமத்தில் 113 பயனாளிகளுக்கு ரூ.67,27,878 மதிப்பிலும் என மொத்தம் 497 பயனாளிகளுக்கு ரூ.3,39,27,680 மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் அமைச்சா் சி.வெ. கணேசன் பேசுகையில், கல்வராயன்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் சாலை வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தொழிலாளா் நலத் துறை மூலம் வாரியங்களில் பதிவு செய்யும் நபா்களுக்கு திருமணம், கல்வி நிதியுதவி, விபத்து மரணத்துக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக நிதியுதவி என நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்றாா்.
முன்னதாக, முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சா் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் லூா்துசாமி, தனித் துணை ஆட்சியா் சுமதி, கல்வராயன்மலை வட்டாட்சியா் கோவிந்தராஜ், கல்வராயன்மலை ஒன்றியக் குழுத் தலைவா் சி.சந்திரன், துணைத் தலைவா் ஜா.பாச்சாபீ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.