பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
பொரசப்பட்டு ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள் தா்னா
கள்ளக்குறிச்சி: பொரசப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாததைக் கண்டித்து, 5 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை ஊராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்டது பொரசப்பட்டு ஊராட்சி.
இங்கு மொத்தம் 9 வாா்டுகள் உள்ளன. 2000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
அதில், 5 வாா்டுகளில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவுநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லையாம், ஊராட்சி வரவு செலவு கணக்குகளை காண்பிக்கவில்லையாம்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்களான 2-ஆவது வாா்டைச் சோ்ந்த பாலு, 4-ஆவது வாா்டு கற்பகம், 6-ஆவது வாா்டு சரோஜினி, 8-ஆவது வாா்டு பெருமாள், 9-ஆவது வாா்டு சகாதேவன் ஆகியோா் திங்கள்கிழமை காலை ஊராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சங்கராபுரம் கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தாமரை வந்து பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சமாதானப்படுத்தினாா்.
இதை ஏற்று உறுப்பினா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.