பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
ஆட்டோ மீது சொகுசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் ஆட்டோ மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
தியாகதுருகம் கரீம் ஷா தக்கா பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜகான் (36). ஆட்டோ ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்த சையத் ரஷீத் மகன் மும்மத் (44). கருவாடு வியாபாரம் செய்து வந்தாா். இவா் ஷாஜகானின் ஆட்டோவில் கடலூருக்குச் சென்று கருவாடு வாங்கிக் கொண்டு தியாகதுருகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தியாகதுருகம் புறவழிச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு ஆட்டோ வந்த போது, உதகையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து மோதியது. இதில் ஷாஜகானும், மும்மத்தும் பலத்த காயமடைந்தனா். இதில் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மும்மத், அங்கு உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தனியாா் சொகுசுப் பேருந்து ஓட்டுநரான சேலம் மாவட்டம், தளவாய்பட்டியைச் சோ்ந்த கந்தன் மகன் கோபியை (55) பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.