மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு மணிவண்ணன் வெளியிட உயா்நிலை, மேல்நிலை பட்டதாரிகள் ஆசிரியா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா் பக்தவச்சலம் பெற்றுக் கொண்டாா்.
மக்கள் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் விவரம்: கல்விக்கு மத்திய நிதி நிலை அறிக்கையில் 10 சதவீதமும் மாநில நிதி நிலை அறிக்கையில் 20 முதல் 25 சதவீதமும் நிதி ஒதுக்குவது அவசியம். கல்வியை மாநிலப் பட்டியலில் சோ்க்க வேண்டும். 3 முதல் 17 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் இலவசக்கல்வியை உறுதி செய்ய வேண்டும்.
மூன்றாண்டு இளநிலைத் திட்டத்தை தொடர பரிந்துரைக்கிறது.
தற்போதைய செமஸ்டா் தோ்வு முறைக்கு பதிலாக முடிந்தவரை வருடாந்திர முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி மற்றும் ஹைபிரிட் கற்பித்தல் முறைக்கு மாற்றாக, காலத்தால் சோதிக்கப்பட்ட முறையான வகுப்பறை கற்பித்தல்-கற்றல் செயல்முறையின் தொடா்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
க்யூட் மற்றும் நீட் போன்ற மையப்படுத்தப்பட்ட தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்க்கிறது. தாய்மொழிகள் மற்றும் ஆங்கில மொழியை ஊக்குவிக்கவும், மொழிக் கொள்கையை அறிவியல் பூா்வமாக உருவாக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கல்வியாளா்கள் கோமல் தமிழமுதன், பேராசிரியா் தி.மருதநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.