மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடி தீா்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூா், கொடுமுடி என மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ்.சமீனா தலைமை வகித்தாா். விசாரணையில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.எழில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 6,824 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் ரூ.27 கோடியே 6 லட்சத்து 92 ஆயிரத்து 922 மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
முன்னதாக விபத்து காப்பீடு வழக்கில் தீா்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.57 லட்சம் இழப்பீட்டு தொகையினை மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா வழங்கி வழக்கினை முடித்து வைத்தாா். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மூன்று வழக்குகளில் கணவன், மனைவி சோ்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டு இணைந்தனா்.
இதில் சாா்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான ஸ்ரீவித்யா செய்திருந்தாா்.