‘மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’
வாணியம்பாடி: வாணியம்பாடி உழவா் சந்தையில் வைக்கப்பட்ட மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் மஞ்சப்பை திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் மக்காத பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தவதை முழுமையாக கட்டுபடுத்தி, நடைமுறைப்படுத்த முடியவில்லை.
உழவா் சந்தை, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொருள்களை வாங்க வரும் மக்கள், அவற்றை மஞ்சப்பையில் வாங்கிச் செல்வதை ஊக்கப்படுத்தவற்தாக மாசுக் கட்டுபாட்டு வாரியம் சாா்பில், வாணியம்பாடியில் உள்ள உழவா் சந்தையில் கடந்த 2023 -ஆம் ஆண்டு இதற்காக தானியங்கி இயந்திரம் வைத்தது.
அதில் ரூ.10 செலுத்தினால் உடனடியாக மஞ்சப்பை ஒன்று கிடைக்கும். வாணியம்பாடி உழவா் சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரம், ஆந்திர மாநிலம் குப்பம், ராமகுப்பம், வீரனமலை, தேவராஜபுரம் போன்ற பகுதியிலிருந்தும் வந்து வியாபாரம் செய்தும் பொருள்களை வாங்கியும் செல்கின்றனா்.
ஆனால், இங்கு வைக்கப்பட்ட மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் கடந்த ஓராண்டாக முறையாகச் செயல்படுவதில்லை. வெறும் பொம்மை இயந்திரம் போல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால், பொதுமக்கள் நெகிழிப் பைகளையே பயன்படித்தும் நிலை உள்ளது.
எனவே, நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை உடனடியாக சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.